தமிழ்நாடு
21ஆம் தேதியில் இருந்து வெளுக்க போகிறது கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் வரும் 21ஆம் தேதி முதல் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சென்னை உள்பட பல பகுதிகளில் தினம்தோறும் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் வரும் 21ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.
வரும் 21ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 22ஆம் தேதி திருச்சி, மதுரை, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, தென்காசி, வேலூர், திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
23ஆம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.