தமிழ்நாடு
டாஸ்மாக் கடைக்கு செல்ல இலவச பஸ்பாஸ்: கலெக்டரிடம் மனுகொடுத்த குடிமகன்!
டாஸ்மாக் கடைக்கு சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என ஈரோடு கலெக்டரிடம் குடிமகன் ஒருவர் மனு கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளூரில் டாஸ்மாக் கடை இல்லை என்பதால் வெளியூர் சென்று தினமும் குடிக்க வேண்டிய நிலை இருப்பதாகவும், அதனால் அரசு பேருந்துகளில் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்றும் ஈரோடு கலெக்டரிடம் குடிமகன் ஒருவர் மனு கொடுத்துள்ளார்.
ஈரோடு பகுதியைச் சேர்ந்த செங்கோட்டையன் என்ற 40 வயது விவசாயி நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் தான் வெள்ளோட்டம்பரப்பு என்ற பகுதியில் இருப்பதாகவும் அங்கு பல மாதங்களாகியும் இன்னும் டாஸ்மாக் கடைகள் திறக்க வில்லை என்றும் எனவே பக்கத்து ஊருக்கு சென்று தான் மது வாங்கி குடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மது வாங்க தினமும் பேருந்துகளில் சென்று வருவதால் நேர விரயம் மற்றும் செலவு கூடுதலாகிறது என்றும் எனவே உள்ளூரில் டாஸ்மாக் கடையை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை உள்ளூரில் கடை திறக்கும் வசதி இல்லை என்றால் தாங்கள் வெளியூர் பேருந்தில் சென்று குடிப்பதற்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை பார்த்த குறைதீர்க்கும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த மனுவை மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அந்த நபரை சமாதானப்படுத்தி அதிகாரிகள் அனுப்பி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.