தமிழ்நாடு
ஃப்ரீ ஃபயர் விளையாட்டு மோகத்தால் மேலும் ஒரு உயிர்ப்பலி: அதிர்ச்சியில் தாய்!
சென்னை புழல் பகுதியை கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 42 வயதான மீனா. கணவனைப் பிரிந்து மகனுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார். வீட்டு வேலைகள் செய்து குடும்பத்தை காப்பாற்றி வரும் நிலையில் அவரது மகன் சுரேஷ், அருகில் உள்ள அரசுப் பள்ளிகள் பத்தாம் வகுப்பு படித்து வந்தார் .
கொரோனா நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றபோது சுரேஷுக்கு அவரது தாயார் ஸ்மார்ட்போன் வாங்கி கொடுத்தார். அப்போது சுரேஷூக்கு ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டு அறிமுகமானது. அப்போதிலிருந்து சுரேஷ் எந்நேரமும் தனது கவனத்தை ஃப்ரீ ஃபயர் விளையாட்டில்செலுத்தி வந்ததால்படிப்பில் ஆர்வம் குறைந்தது. இதனால் தாய் மீனா மகனை கண்டித்த போதிலும் சுரேஷ் ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டு போதையிலிருந்து மீளவில்லை.
இதனால் கோபம் அடைந்த மீனா நான்கு நாட்களாக மகனிடம் பேசாமல் இருந்தார். சுரேஷ் கெஞ்சிக் கூத்தாடியும் மீனா பேசாததால், சுரேஷ் விபரீத முடிவை எடுத்து தனது வீட்டின் எதிரே உள்ள பழைய வீட்டில் தாயின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்குச் சென்ற மீனா வழக்கம்போல் மாலை வீடு திரும்பியதும் மகனைத் தேடினார். வீட்டில் மகன் இல்லாத நிலையில் எதிர் வீட்டில் தேடிய போது தான் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தூக்கில் தொங்கிய மகனைப் பார்த்து தாய் மீனா கதறி அழுத காட்சி அக்கம்பக்கத்தினர் கண்ணீர் விட வைத்தது. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.