இந்தியா
அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு ஊசி- கலக்கும் கேரளா
கேரளாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி இலவசமாகவே வழங்கப்படும் என கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரள முதல்வரின் அறிவிப்புக்குப் பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுகுறித்து முதல்வர் பினராயி கூறுகையில், “கொரோனா தடுப்பு ஊசி வரும் போது அதற்கான கட்டணத்தை மக்களிடமிருந்து வசூல் செய்யப் போவதில்லை. இது கேரள அரசின் நிலைப்பாடு” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் கொரோனா தடுப்பு ஊசி இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா மற்றும் ஃபைசர் ஆகிய நிறுவனங்கள் மூலம் தயாரான கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளன. விரைவில் அங்கீகாரம் கிடைக்கும் சூழலில் பொதுமக்களுக்கு அரசாங்கம் சார்பிலேயே வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.