தமிழ்நாடு
வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகின்றனர்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு
வெள்ளை அறிக்கை மூலம் மக்களை திசை திருப்புகின்றனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று காலை வெள்ளை அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2.63 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் ஐந்து லட்சம் கோடிக்கும் மேல் தமிழகத்திற்கு கடன் இருப்பதாகவும் தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் சிக்கலான நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும் முறை இல்லாமல் திட்டமிடாமல் ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடந்த காலங்களில் தமிழக அரசு செலவு செய்திருப்பதாகவும் கடந்த அதிமுக அரசின் நிர்வாக திறமையின்மை காரணமாக தான் தமிழகம் இன்று சிக்கலில் இருப்பதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் வெள்ளை அறிக்கை மூலம் அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதில் மக்களை திசை திருப்புவதற்காகவே திமுக அரசு இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருப்பதாகவும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் முன்கூட்டியே வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் திமுக அரசு விட்டுச்சென்ற கடனுக்கும் அதிமுக அரசு வட்டிகட்டி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெள்ளை அறிக்கையில் புதிய விஷயங்கள் ஏதும் இல்லை என்று கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மக்களை வரி விதிப்புக்கு தயார்படுத்துவதற்காகவே வெள்ளை அறிக்கை உள்ளது என்றும் வரிச்சுமையை மேலும் அதிகப்படுத்துவதற்காகவே வெள்ளை அறிக்கை வெளியிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை என்று கூறுவதிலிருந்து திமுக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தப்போவதாக கூறுகிறதா என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.