தமிழ்நாடு
பிடிஆருக்கும் நாகரீகம் என்ற சொல்லுக்கும் ஏழாம் பொருத்தம்: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்
கடந்த ஆறுமாத கால திமுக ஆட்சியில் அதிகம் பரபரப்புடன் பேசப்பட்டவர் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்பதும் பல சர்ச்சைகளில் அவர் சிக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சமீபத்தில் அவர் ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லாமல் தனது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றது இணையதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தங்கள் கட்சி மூத்த தலைவர்கள் உள்பட பலரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனுக்கு அறிவுரை கூறும் வகையில் கூறியுள்ளதாவது:
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் நாகரீகம் என்ற சொல்லுக்கும் ஏழாம் பொருத்தம் போல. இருந்த கொஞ்சநஞ்சத்தையும் அமெரிக்காவிலேயே விட்டுவிட்டு வந்து விட்டார் என நினைக்கிறேன்.
பதவி வரும்போது பணிவும் வரவேண்டும், துணிவும் வரவேண்டும் என்று பாடியிருப்பார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். இந்த பாடல் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ? தம்பி பிடிஆர் உனக்கு மிகவும் பொருந்தும்.
\நீங்கள் பொருளாதாரத்தை புத்தகத்தில் படித்திருப்பீர்கள், பெரும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ,பணக்காரர்களுக்கு வேலை செய்திருப்பீர்கள். ஆனால் 1991-ல் இருந்தே அமைச்சர் என்ற முறையில் பொருளாதாரத்தை பட்டறிவின் மூலமாக கற்றுக் கொண்டவன் நான் தம்பி
தம்பி, ட்விட்டர் உலகத்தில் இருந்தும், மற்றவர்களை வசைபாடுவதில் இருந்தும் விலகி மக்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பி. இனி நல்ல மாணவன் எப்படி தவறாமல் பள்ளிக்கு செல்வானோ அதுபோல கடமை உணர்வுடன் ஜிஎஸ்டி கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.
— DJayakumar (@offiofDJ) September 24, 2021