உலகம்
சட்டக்கல்லூரி செல்லாமலேயே வழக்கறிஞர்.. ஆம் உலகின் முதல் ரோபோ வழக்கறிஞரின் வாதம்..!
ரோபோ என்ற கூறப்படும் இயந்திர மனிதன் தற்போது பல துறைகளில் நுழைந்துவிட்டது என்பதும் இதனால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. உணவகங்களில் ஆர்டர் எடுப்பது முதல் சப்ளை செய்வது வரை ரோபோ வந்துவிட்டது என்பதும் ரோபோ செய்யாத வேலையே இல்லை என்ற நிலை இன்னும் சில வருடங்களில் வந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களாக ரோபோ பயன்படுத்தப்பட உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. லண்டனைச் சேர்ந்த ஜோஸ்வா ப்ரவுடர் என்பவர் டூ நாட் பே என்ற சட்ட ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் அவர் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் ரோபோ வழக்கறிஞரை உருவாக்கி உள்ளார்.
நீதிமன்றத்தில் ஒவ்வொரு மாதமும் முக்கிய வழக்குகள் குறித்த விசாரணையில் இந்த ரோபோ வழக்கறிஞரை ஆஜராக்க திட்டமிட்டு உள்ளதாகவும், தற்போதைக்கு எந்த நீதிமன்றத்தில் யாருடைய வழக்கு எந்த தேதியில் விசாரணை நடைபெறுகிறது என்ற தகவலை ரோபோ வழக்கறிஞர்களுக்கு உதவிடும் வகையில் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளுக்கு எதிராக சாமானிய மக்களால் பெரும் தொகை செலவழித்து வழக்கறிஞரை அமர்த்த முடியவில்லை என்றும் ஆனால் இந்த ரோபோ வழக்கறிஞரை மிக குறைந்த செலவில் சாமானை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மாத சம்பள அடிப்படையில் கூட இந்த ரோபோவை வாடகைக்கு அமைத்துக் கொள்ளலாம் என்றும் மூன்று மாத சந்தா 2932 மட்டுமே வசூலிக்கிறோம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
உலகின் முதல் ரோபோ வாடிக்கையாளர் ஒருவருக்காக நீதிமன்றத்தில் விரைவில் ஆஜராகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த ரோபோ நீதிமன்றத்தில் ஆஜராகும் போது ஏதேனும் தவறு செய்து வாடிக்கையாளர்களுக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டால் அந்த அபராத தொகையையும் எங்கள் நிறுவனமே செலுத்தும் என்றும் டு நாட் பே நிறுவனம் தெரிவித்துள்ளது.