தமிழ்நாடு
சென்னை துறைமுகம் – மதுரவாயல்: இந்தியாவின் முதல் இரண்டடுக்கு பறக்கும் சாலை:
சென்னையில் 19 கிலோ மீட்டர் அளவில் இரண்டடுக்கு பறக்கும் சாலை அமைக்கப்பட உள்ளதாகவும் இந்தியாவின் முதல் இரண்டடுக்கு பறக்கும் சாலை இதுதான் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சென்னையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் சாலை அமைக்க கடந்த 2008ஆம் திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் அந்த திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மதுரவாயல் முதல் துறைமுகம் வரை பறக்கும் சாலை இந்தியாவில் முதன் முறையாக இரண்டு அடுக்காக கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை மூன்று மாதங்களில் நிறைவடையும் என நெடுஞ்சாலை துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
எந்த இடத்தில் அணுகுச்சாலை அமைக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும் முதல் தளத்தில் வாகனங்கள், இரண்டாம் தளத்தில் கண்டனர் செல்லும் வகையில் இந்த சாலை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து சென்னை நகருக்குள் செல்லாமலேயே நேராக துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரிகள் செல்லும் என்றும், இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சாலை 19 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமையும் என்றும் இந்த பறக்கும் சாலைக்கு கீழே உள்ள சாலைகளில் உள்ளூர் வாகனங்கள் செல்லும் என்றும் கூறப்படுகிற.து இந்த பறக்கும் சாலை கட்டப்பட்டு அமலுக்கு வந்துவிட்டால் தொழிற்சாலைகளும் மேம்படும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2008-ஆம் ஆண்டு இந்த சாலை திட்டமிடப்பட்டு ரூபாய் 1500 கோடி மதிப்பில் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்தத் திட்டத்திற்கான பணிகள் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மீண்டும் திமுக ஆட்சி ஏற்பட்டதை அடுத்து இந்த பறக்கும் சாலை திட்டத்தை இரண்டடுக்கு பறக்கும் சாலையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.