தமிழ்நாடு
ஒரே மாவட்டத்தில் 5 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா: பள்ளிகள் மூடப்படுமா?
![schools 1200 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/schools-1200.jpg)
நேற்றைய திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 19 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதால் அம்மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் நேரடி வகுப்புகள் தொடங்க உள்ளன என்பதும் அதேபோல் கல்லூரி வகுப்புகள் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடைபிடித்து வந்த போதிலும் தமிழகத்தில் ஆங்காங்கே கொரோனா வைரஸால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு என்ற பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் வல்லிபுரம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவிக்கும், செம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவர்களுக்கும், மாமல்லபுரம் மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுராந்தகம் அரசு உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கும், இந்து மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் ஒரே மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.