தமிழ்நாடு
பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்குவது எப்போது? அமைச்சர் பொன்முடி தகவல்!
பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன என்பதும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும் அதேபோல் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டது என்பதும் தெரிந்தது. அடுத்த கட்டமாக நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது என்பதும் கடந்த 4ஆம் தேதி முதல் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரி திறக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் கல்லூரி மாணவர்களின் கவுன்சிலிங் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன்னர் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் முதலாம் ஆண்டு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் அக்டோபர் 25ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் கடந்த ஆண்டு 500 இடங்கள் நிரப்பப்படவில்லை என்றும் ஆனால் இந்த ஆண்டு அனைத்து இடங்களும் நிரப்பப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.