இந்தியா
கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து: உடல்கருகி 12 பேர் பலி!
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரனோ வைரஸ் மட்டுமின்றி கொரனோ வைரசால் பாதிக்கப்பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையிலும் தீ விபத்து உள்பட ஒரு சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டு உயிர் பலியாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கொரோனா நோய் சிகிச்சை மையத்தில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் பரூச் என்ற இடத்தில் கொரோனா சிகிச்சை மையம் ஒன்று கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் நேற்று நள்ளிரவு திடீரென 12.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும் தீ விபத்தில் காயமடைந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன கொரோனா மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.