தமிழ்நாடு
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிபத்து: அதிர்ச்சி தகவல்
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மருத்துவமனையில் சற்று முன்னர் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீ விபத்து குறித்து தகவல் வெளியானதும் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வந்து தீயை அணைக்கும் பணியை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த தீ விபத்து குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறிய போது, ‘தீ விபத்து நடந்த இடத்தில் 27 நோயாளிகள் இருந்ததாகவும் அவர்கள் உடனடியாக பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டதாகவும் தற்போது தீயை அணைக்கும் பணி முழுமையாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் தேவையில்லாமல் இங்கு பொதுமக்கள் கூடுவதால் தீயணைப்பு வீரர்களுக்கு பிரச்சனை இருப்பதாகவும், எனவே பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.