தமிழ்நாடு
சென்னை நகைக்கடையில் பயங்கர தீ விபத்து: லட்சக்கணக்கில் சேதம் என தகவல்!
சென்னையில் உள்ள நகைக்கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த கடையில் இருந்த ஏராளமான பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பாரிமுனையில் உள்ள நகைகடை பாத்திமா ஜுவல்லர்ஸ். இந்த கடையில் இன்று காலை திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஃபாத்திமா ஜூவல்லர்ஸ் கடையின் தரைதளத்தில் வைக்கப்பட்டிருந்த மின்சார பிளக்ஸ் போர்டு வைத்திருக்கும் பகுதியில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து முதல் மற்றும் இரண்டாவது மாடி வரை தீ வேகமாக பரவியதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தரை தளம், முதல் தளம், இரண்டாவது தளம் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதம் ஆகியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு ஒரு சில மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இன்று காலை 11 மணி அளவில் லேசான தீ விபத்து ஏற்பட்டதாகவும் அப்போது உடனடியாக தீயணிப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து இருந்தால் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கலாம் என்றும் ஆனால் தீ மளமளவென்று எரிந்த பின்னர் தான் தீயணைப்பு துறையினர் வந்தார்கள் என்றும் அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தி நகரில் உள்ள குமரன் தங்க நகை மாளிகை என்ற நகை கடையில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமான சேதத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.