தமிழ்நாடு
20 ஆண்டுகளுக்கு பின் இன்று மீண்டும் தாக்கல்: வெள்ளை அறிக்கை என்றால் என்ன?
தமிழகத்தில் அவ்வப்போது அரசியல்வாதிகள் வெள்ளை அறிக்கை குறித்து பேசிக் கொண்டிருந்தாலும் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இன்று மீண்டும் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்
வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பதை பார்ப்போம். தமிழக அரசின் அதிகார பூர்வமாக அறிக்கையாக இருக்கும் இந்த வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் வரவு செலவு கணக்குகள், கடன் எவ்வளவு? நிதி இருப்பு எவ்வளவு? உள்பட அனைத்து விஷயங்களும் அதிகாரபூர்வமாக இருக்கும் என்பதை வெள்ளை அறிக்கை சிறப்பு அம்சமாகும்
இந்த வெள்ளை அறிக்கை கடந்த 2001 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சி பொன்னையன் அவர்கள் நிதியமைச்சராக இருந்தபொது வெள்ளை அறிக்கை தாக்கல் செய்த நிலையில் தற்போது 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
2011ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட கொள்கைகள், திட்டங்கள், அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை, தற்போதைய நிதி கையிருப்பு உள்பட அனைத்து விஷயங்களும் இன்று தாக்கல் செய்யும் வெள்ளை அறிக்கையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 13ஆம் தேதி தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த வெள்ளை அறிக்கை முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
இந்த நிலையில் இதற்கு முன் தமிழகத்தில் எப்பொழுது எல்லாம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்ற விவரத்தை தற்போது பார்ப்போம்:
* கடந்த 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.முதலமைச்சராக இருந்தபோது, டிசம்பர் 29ந்தேதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் தமிழகத்தில் வீசிய புயல் மற்றும் வெள்ளம் ஆகிய பேரிடர்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டது தொடர்பான தகவல்கள் இருந்தன.
* 1981ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ந்தேதி எம்.ஜி.ஆர். முதலமைச்சராக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் உணவு பொருட்களின் கையிருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர்பான தகவல்கள் இருந்தன.
* 1983ம் ஆண்டு மார்ச் மாதம் 9ந்தேதி சட்டசபையில் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தில் நிலவிய வறட்சி நிலைமை குறித்த தகவல்கள் இருந்தன.
* 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ந்தேதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம் தொடர்பான தகவல்கள் இருந்தன.
* 1994ம் ஆண்டு ஜனவரி 1ஆம்தேதி, வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் கடுமையான புயல், மழை, வெள்ள நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் இருந்தன.
* 1996ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் மழை, புயல், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான தகவல் இருந்தன
* 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம்தேதி வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பான தகவல்கள் இருந்தன.
* 2000ஆம் ஆண்டு மே 11ஆம்தேதி கருணாநிதி முதல்வராக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசு பணிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு பணிகளில் வழங்கிய இடஒதுக்கீடு குறித்த தகவல்கள் இருந்தன.
* 2001ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம்தேதி ஜெயலலிதா முதல்வராக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த தகவல்கள் இருந்தன.
2001ஆம் ஆண்டிற்கு பின்னர் இதுவரை எந்த வெள்ளை அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.