தமிழ்நாடு
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000.. முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர் பிடிஆர்!
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடைபெற்றபோது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்பது தான். கொடுக்காத வாக்குறுதிகளான பேருந்தில் மகளிருக்கு இலவசம் போன்றவற்றை நிறைவேற்றிய திமுக அரசு, கொடுத்த வாக்குறுதியான குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 தொகை வழங்கப்படவில்லை என சர்ச்சைக்குள்ளானது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் இந்த விவகாரத்தை கடந்த சில மாதங்களாக பெரிதாக்கி வருகின்றனர் என்றும் திமுகவுக்கு எதிரான இந்த விமர்சனங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் நிதி நிலையை காரணம் காட்டி குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை தொடங்க திமுக அரசு தாமதப்படுத்தியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தரும் திட்டம் தொடர்பான கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இந்த பணி 85 சதவீதம் முடிவடைந்து விட்டது என்றும் 2023-ம் ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் அறிவிக்கப்படும் என்றும் இந்த அறிவிப்பை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் திட்டம் அதன் பின்னர் ஏப்ரல் அல்லது மே மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.