தமிழ்நாடு
அரசு பணம் முறைகேடு: ஆளுநர் மாளிகை மீது நிதியமைச்சர் பிடிஆர் பரபரப்பு குற்றச்சாட்டு!
சட்டப்பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் தொடர்பான மானியக்கோரிக்கையில் பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், 5 கோடி ரூபாய் அரசு பணம் தனியார் நிறுவனத்திற்கு ஆளுநர் வழங்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முறைகேடுகள் நடைபெற்றதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் அதிமுக ஆட்சியில் அட்சய பாத்திரம் என்ற திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டது, தற்போதைய அரசு அதன் பெயரை மாற்றி உள்ளதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர், கடந்த ஆட்சியில் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
மேலும், ஆளுநர் மாளிகைக்கு தனிப்பட்ட அதிகாரத்தின் கீழ் கொடுக்கப்படக்கூடிய நிதியானது 50 லட்சம் ரூபாய் என்பதில் இருந்து திடீரென 2019-ஆம் ஆண்டு 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது, அந்த 5 கோடி ரூபாயில் 4 கோடி ரூபாய் தனிப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. 1.80 கோடி ரூபாய் அரசுக்கணக்கில் இருந்து எடுத்து வேறு கணக்கில் மாற்றப்பட்டுள்ளது, ஏதோ கட்சி நடத்துவதற்காக செலவு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை.
5 கோடி ரூபாய் அரசு பணத்தை எப்படி தனியார் நிறுவனத்திற்கு வழங்கினார்கள்? ஆளுநர் மாளிகைக்கு ஒதுக்கப்பட்ட பணம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதுதானா? என கேள்வி எழுப்பிய நிதியமைச்சர் அட்சய பாத்திரம் திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் நிதியை ஆளுநர் மாளிகை ஒதுக்கியது குறித்து ஆளுநர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு ஆளுநர் பதில் சொல்ல வேண்டும் என அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகனும் வலியுறுத்தினார்.