இந்தியா
தந்தையின் தவறான நடத்தை: அவமானத்தில் தற்கொலை செய்துகொண்ட மகள்கள்!
பெங்களூரில் தந்தை வேறு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதால் அவரது இரண்டு மகள்கள் மற்றும் மனைவி ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரை சேர்ந்த சித்தய்யாவுக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், மானசா, பூமிகா என இரண்டு மகள்களும் உள்ளனர். ஆனால் சித்தய்யா வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால் கடந்த மூன்று வருடமாக அவர் தனது குடும்பத்தை கண்டுகொள்ளாமல் இருந்து வந்துள்ளார்.
மூத்த மகள் மானசாவும், அவளது அம்மாவும் சித்தய்யாவுடன் பலமுறை சமாதானம் செய்து பேசி வந்தனர். ஆனால் அவர் தொடர்ந்து அவர்களை புறக்கணித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் அவர்களுடன் சாண்டை போட்டுக்கொண்டு தமிழகம் வந்துள்ளார் சித்தய்யா. இதனால் மனமுடைந்த இரண்டு மகள்கள் மற்றும் அவர்களது தாய் என மூவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
இதனையடுத்து தனது மாமா புட்டசாமிக்கு வாட்ஸ் அப்பில் ஆடியோ மெஸ்ஸேஜ் ஒன்றை மானசா அனுப்பி விட்டு தனது தங்கை மற்றும் தாயுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அந்த வாட்ஸ் அப் ஆடியோ மெஸ்ஸேஜ்ஜில், ஒவ்வொருவருக்கும் நல்ல அப்பா கிடைக்க வேண்டும். ஆனால் எங்கள் அப்பா எங்களது குடும்பத்தை சீரழித்துவிட்டார். எங்கள் தற்கொலைக்கு அப்பாதான் காரணம் என பேசியுள்ளனர்.
இதனையடுத்து புட்டசாமி கொடுத்த தகவலையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சித்தய்யாவை கைது செய்ய அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.