இந்தியா
பிரதமர் கொடுத்த வாக்குறுதி… ஏற்காத விவசாயிகள்… உச்சகட்ட போராட்டத்துக்கு ஆயத்தம்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடந்த மாத இறுதியிலிருந்து பெருந்திரளான விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். குறிப்பாக டெல்லி எல்லைகளில் நடக்கும் இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
‘வேளாண் சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும்’ என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசுத் தரப்போ, ‘சட்டங்களை முழுவதுமாக ரத்து செய்ய முடியாது. வேண்டுமானால் அதில் தேவையான மாற்றம் செய்து கொள்ளலாம்’ என்று கூறி வருகிறது. இது தொடர்பாக இரு தரப்புகளுக்கும் இடையில் நடந்தப் பேச்சுவார்த்தையில் இதுவரை எந்தவித சுமுகத் தீர்வும் எட்டப்படவில்லை. இதனால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க விவசாயிகள் போராட்டத்தைத் தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று, டெல்லி – ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையை முற்றைகையிட உள்ளனர். மேலும் நாளை அனைத்திந்திய அளவில் பட்டினிப் போராட்டம் நடத்தவும் விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மாவட்ட நிர்வாக அலுவலகங்கள் முன்னர் உண்ணாவிரதப் போராடத்தை அரங்கேற்ற விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
வேளாண் சட்டங்கள் குறித்து பிரதமர் மோடி, ‘இந்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வருமானம் பெருகும். இந்த சீர்திருத்தங்கள் மூலம் விவசாயத்தில் அதிக முதலீடுகள் ஈர்க்கப்படும். அது விவசாயிகளுக்குப் பலன் தரும்’ என்று கூறியுள்ளார். இருப்பினும் பிரதமரின் வாக்குறுதியை ஏற்காமல் விவசாயிகள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.