இந்தியா
‘மன் கி பாத்’ மோடி பேச்சு… எதிர்ப்பு தெரிவித்து தட்டுகளை அலறவிட்ட விவசாயிகள்!
சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் சுமார் ஒரு மாத காலமாக பெருந்திரளான விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தரப்பு, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வர மறுக்கிறது. இந்த காரணத்தினால் இதுவரை இரண்டு தரப்புகளுக்கும் இடையில் நடந்த பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில் இன்று, அனைத்திந்திய வானொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி, தனது மாதாந்திர ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றினார். இப்படி பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு எதிராக டெல்லியில் போராட்டக் களத்தில் உள்ள விவசாயிகள், தட்டுகளைத் தட்டி சத்தம் எழுப்பியும், கோஷங்கள் போட்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது, நாட்டில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மக்களை வீட்டு பால்கனிகளில் வந்து தட்டுகளைத் தட்டி ஓசையெழுப்பச் சொன்னார் மோடி. இதை மையப்படுத்திதான் தற்போது விவசாயிகளும் புதுவித போராட்ட உத்தியைக் கையிலெடுத்துள்ளார்கள்.