சினிமா செய்திகள்

“தலைவா நீ வந்தே ஆகணும்!”- ரஜினியை அரசியலுக்கு வரவழைக்க ரசிகர்கள் ‘பெருந்திரள்’ போராட்டம்

Published

on

நடிகர் ரஜினிகாந்த், நேரடி அரசியலில் பங்கேற்க களத்துக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, அவரது ரசிகர்கள் இன்று சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, அறிக்கை வெளியிட்டிருந்த ரஜினி, உடல்நல பாதிப்பு காரணமாக அரசியல் கட்சித் தொடங்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். அவரின் இந்த முடிவுக்கு ஆதரவும் விமர்சனங்களும் எழுந்த நிலையில், தற்போது அவரது ரசிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

முன்னதாக ரஜினி வெளியிட்ட அறிக்கையில், ‘என் உயிர் போனாலும் பரவாயில்லை, நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேன், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலு விதமாக என்னைப் பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆஎக்க விரும்பவில்லை.

ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும்தான் தெரியும்.

நான் உண்மையைப் பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படை தன்மையையும் விரும்பும், என் நலத்தில் அக்கறையுள்ள, என்மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்’ என்று கூறியிருந்தார்.

இப்படி தன் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாத தெரிவித்தப் பின்னரும், அவரது ரசிகர்களில் ஒரு தரப்பினர், போராட்டம் செய்து வருகின்றனர். அரசியல் ரீதியாகவும் ரஜினிக்கு அழுத்தங்கள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.

ரஜினிக்கு மிகவும் நெருக்கமான அரசியல் ஆலோசகரான ‘துக்ளக்’ ஆசிரியர் குருமூர்த்தி, ரஜினி அறிக்கை வெளிவந்த உடன், ‘ரஜினிகாந்த் தனது உடல்நிலை காரணமாக எடுத்த முடிவு குறித்து என்னிடம் தெரிவித்திருந்தார். இது தவிர்க்க முடியாத முடிவு. ரஜினியின் அறிக்கையை கூர்ந்து கவனியுங்கள். தேர்தல் அரசியலுக்கு வராமல், தமிழக மக்களுக்கு என்னால் என்ன சேவை செய்ய முடியுமோ அதை நான் செய்வேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். என்னுடைய கணிப்பு இதுதான்: தமிழகத்தில் 1996ல் செய்தது போன்றே ரஜினிகாந்த் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார்’ என்று சூசக கருத்து கூறினார்.

மேலும், இந்த ஆண்டு துக்ளக் ஆண்டு விழாவுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா, சென்னை வரவுள்ளதாகவும், அந்த நேரத்தில் ரஜினிகாந்தை அவர் நேரில் சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டது. அவருக்கு பதிலாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, துக்ளக் ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். அவர், அமித்ஷாவுக்கு பதிலாக ரஜினியை சந்திக்க வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.

 

Trending

Exit mobile version