தமிழ்நாடு
இந்த தேர்தலில் பதிவானது முதல் கள்ள ஓட்டு: குமரியில் பரபரப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கன்னியாகுமரி தொகுதியில் முதல் கள்ள ஓட்டு இந்த தேர்தலில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 11-ஆம் தேதி முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 95 மக்களவை தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. அதில் தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதனையடுத்து தமிழகத்தில் காலை 7 மணி முதலே மக்கள் ஆர்வத்துடன் வக்களித்து வருகின்றனர். பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்தலில் முதல் கள்ள ஓட்டு ஒன்று பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி தொகுதிக்கு உட்பட்ட பிலாங்காலை பகுதியில் இந்த கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள கல்லுவிளையை சேர்ந்த அஜின் என்பவர் ஓட்டு போட தனது வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார். ஆனால் அவரது ஓட்டை வேறு யாரோ ஏற்கனவே போட்டுள்ளதால் அவர் பெரிதும் ஏமாற்றமடைந்தார். இதனையடுத்து அஜின் வாக்குச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அஜினின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்ட நபர் யார் என்பதை இன்னமும் கண்டுபிடிக்கவில்லை. இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தேர்தலில் முதல் கள்ள ஓட்டு கன்னியாகுமரி தொகுதியில் பதிவாகியுள்ளது.