தொழில்நுட்பம்
தற்காலிகமாக செயலிழந்த ஃபேஸ்புக், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம்
ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னணி செயலிகளான ஃபேஸ்புக், மெசெஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியன இன்று சர்வதேச அளவில் தற்காலிக செயலிழப்பைச் சந்தித்துள்ளன.
செயலி கோளாறா அல்லது முடக்கமா என்பது குறித்தத் தகவல்கள் தெளிவாக வெளியாகவில்லை என்றாலும் சர்வதேச அளவில் பல நாட்டு மக்களும் இச்செயலிகளைப் பயன்படுத்துவதில் சிக்கலைச் சந்தித்துள்ளனர். குறிப்பாக ஐரோப்பா கண்டம் முழுவதுமாக இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இன்ஸ்டாகிராம் செயலி பிரேசில், இந்தியா, ஆஸ்திரேலியா, ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் கோளாறைச் சந்தித்துள்ளது. இதனால் உலக மக்களுள் சமுக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் அதிகப்படியாக ட்விட்டர் தளத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங் பகுதியிலும் ஃபேஸ்புக் கோளாறு இடம்பெற்றுள்ளது.
வாட்ஸ்அப் செயலியும் ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றாலும் அதில் எவ்வித சிக்கலும் ஏற்படவில்லை. சமீபத்தில்தான் ஃபேஸ்புக் நிறுவனம் அமெரிக்காவிம் இரண்டு மிகப்பெரிய வழக்குகளைச் சந்தித்துள்ளது. மொத்தமாக ஃபேஸ்புக் நிறுவனத்தையே விற்க வைக்கும் அளவுக்கு அந்த இரண்டு வழக்குகளின் வீரியம் இருந்துள்ளது.
மேலும், ஃபேஸ்புக் நிறுவனம் தனக்குப் போட்டியாளராக எந்த நிறுவனம் உருவானாலும் அந்நிறுவனத்தைக் கைப்பற்றிவிடுவதாகவும் மறுத்தால் நெருக்கடி அளிப்பதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில்தான் சர்வதேச அளவில் ஃபேஸ்புக் செயலிகளில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.