தமிழ்நாடு
தீவிரப் புயலானது ஃபானி: முன்னெச்சரிக்கைக்காக தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு!
![Cyclone 3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/04/Cyclone-3-1.jpg)
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபானி புயலானது தீவிரப் புயலாக உருமாறியுள்ளது. இதனை எதிர்கொள்ள மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு ரூபாய் 1086 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
தென்கிழக்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபானி புயல் நேற்று மாலை மேலும் வலுவடைந்து, தீவிரப் புயலாக உருவெடுத்தது. தற்போது இந்தப் புயல் சென்னைக்கு கிழக்கு, தென்கிழக்குத் திசையில் 730 கி.மீ. தொலைவில் உள்ளது. மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் பயணித்து வரும் ஃபானி புயல் 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும், பின்னர் கடுமையான தீவிரப் புயலாகவும் மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒடிசா கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த ஃபானி புயலால் மே 3, 4 தேதிகளில் ஒடிசா மற்றும் வடக்கு கடலோர ஆந்திரா மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தமிழக கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்துக்கு ரூபாய் 309.375 கோடி, ஆந்திராவுக்கு ரூபாய் 200.25 கோடி, ஒடிசாவுக்கு ரூபாய் 340.875 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூபாய் 235.50 கோடி என மொத்தம் 1086 கோடி ரூபாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.