சினிமா செய்திகள்
அம்பலமானது ஸ்ரீரெட்டியின் நள்ளிரவு தாக்குதல் நாடகம்; எச்சரித்து அனுப்பிய போலீசார்!
தெலுங்கு திரையுலகில் பல பிரபலங்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை கிளப்பிய ஸ்ரீரெட்டி, அங்கு அவரின் புகார்கள் எடுபடாத நிலையில், தமிழ் திரையுலகிலும் நடிகர் ராகவா லாரன்ஸ், சுந்தர்.சி, ஸ்ரீகாந்த் என முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் அவதூறுகளை பேஸ்புக்கில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மேலும், தனது வாழ்க்கையில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பட்டியலோடு உருவாகும் ரெட்டி டைரி படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், படத்திற்கு புரொமோஷன் செய்யும் விதமாக, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை கையில் எடுத்த ஸ்ரீரெட்டி, அந்த பெண்களுக்கு நீதி கிடைக்கத் தான் போராடுவேன் என கூறிவந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு சென்னை வளசரவாக்கத்தில் தன்னுடைய வீட்டில் இருந்த போது பைனான்சியர் சுப்பிரமணி தாக்குதல் நடத்தியதாகவும், சி.சி.டிவிக்களின் மின் இணைப்பை துண்டித்து விட்டு இந்த தாக்குதலை நடத்தியதாகவும் கோயம்பேடு காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலமாக புகார் தெரிவித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீரெட்டி, இந்த தாக்குதலில் தனது வீட்டில் இருந்த கண்ணாடி சேதமானதுடன் தனது ஆடைகளை பிடித்து இழுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து விசாரிக்க ஸ்ரீரெட்டியை போலீசார் அழைத்துள்ளனர். ஆனால் காலையிலிருந்து வராத ஸ்ரீரெட்டி, பின்னர் மாலை 3.30 மணியளவில் மதுரவாயல் உதவி ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் சென்றார்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீரெட்டிதான் சுப்பிரமணியை தனது வீட்டுக்கு அழைத்ததாகவும், அங்கு சுப்பிரமணிக்கு மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, ஸ்ரீரெட்டி பழச்சாறு குடித்தும். பின்னர் இந்த நாடகத்தை ஸ்ரீரெட்டி நடத்தியுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த நான்கு மாதமாக ஸ்ரீரெட்டி வசிக்கும் வீட்டுக்கு சுப்பிரமணிதான் வாடகை கொடுத்து வந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் இருவரும் சமரசமாக செல்வதாக தெரிவித்ததன் பேரில் ஸ்ரீரெட்டியை எச்சரித்து அனுப்பியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.