தமிழ்நாடு
சசிகலா முதல் ஜெயலலிதா வரை… பரபர சூழலில் அதிமுக மா.செ கூட்டம்… என்ன பேசப்பட்டது?
சசிகலா விடுதலை, ஒரு சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் என தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் பம்பரமாக சுற்றித் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி காய் நகர்த்தல்களும் திரை மறைவில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மூன்றாவது அணி உருவாவதற்கும் இந்த முறை தேர்தலில் வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இப்படியான சூழலில் நேற்று எந்த வித சலனமுமின்றி தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கும் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
நேற்று சென்னை, ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுகவின் தலைமையகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரும் கூட்டத்துக்குத் தலைமை வகித்தனர்.
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாகவும் இருந்த சசிகலா, இன்னும் ஒரு சில நாட்களில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வருகிறார். தற்போது அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 27 ஆம் தேதி அவர் விடுதலையாகி வெளியே வரும் போது அதிமுகவில் சலசலப்பு இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதையொட்டி, சசிகலாவின் விடுதலையையொட்டி கட்சியில் எந்த வித சச்சரவுகளும் இருக்கக் கூடாது என்பது நேற்றைய ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்.
அதேபோல வரும் 27 ஆம் தேதி, சென்னை, மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் நினைவிடத்தின் கட்டுமானப் பணிகள் முடிந்து, திறக்கப்பட உள்ளது. இந்த நினைவிட திறப்பானது மிக பிரம்மாண்டமாக நடத்தவும் ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான பணிகள் மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் கலந்து ஆலோசித்துள்ளனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்து, முக்கிய நிர்வாகிகள் மெரினா கடற்கரைக்குச் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.