தமிழ்நாடு

வேளச்சேரி ‘இவிஎம் பறிமுதல்’; சத்யபிரதா சாகு கொடுத்த ‘அடடே’ விளக்கம்- விளாசிய திருமா!!!

Published

on

தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதைத் தொடர்ந்து அன்றே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைத்து அடைக்கும் பணிகள் நடைபெற்றன. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களின் சீல்கள் மே 2 ஆம் தேதி நீக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். இப்படியான சூழலில், சென்னை, வேளச்சேரி தொகுதியில் ஒரு நபர் பைக்கில் 3 வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நேற்று முன் தினம் இரவு இச்சம்பவம் நடந்துள்ள நிலையில், அதிமுக – பாஜகவினரே இதற்கு காரணம் என்று திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரும்பாலும் அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. எனினும் எந்த ஒரு இடத்திலும் வாக்குப்பதிவு நிறுத்தப்படவில்லை. சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடத்தி முடித்ததற்காகத் தலைமை தேர்தல் அதிகாரியையும் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டுகிறோம். அதேநேரத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் வைக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் பாதுகாப்பை தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கோடை வெயில்,  கொரோனா பாதிப்பு ஆகியவற்றுக்கு இடையில் சுமார் 75%  வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தமது வாக்குரிமையை நிலைநாட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெளிவான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. அந்த எந்திரங்கள் 2 பூட்டுகளால் பூட்டப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் சென்னை வேளச்சேரி தொகுதியில்  வாக்குப்பதிவு முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி ஊழியர் இருவர் இருசக்கர வாகனங்களில் எவ்வித பாதுகாப்பும் இன்றி வாக்குப்பதிவு எந்திரங்களைக் கொண்டு சென்றுள்ளனர். அதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களை மடக்கிப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருக்கும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் அவை வாக்குப் பதிவு செய்யப்படாத எந்திரங்கள் என்றும் அவற்றை கவனக்குறைவாகக் கையாண்டதற்காக அந்த மாநகராட்சி ஊழியர்களை இடைநீக்கம் செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இது ஏற்புடையதல்ல. வாக்குப்பதிவு எந்திரங்களை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றவர்கள் கைது செய்யப்பட வேண்டும். மற்ற எந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளனவா என்பதைத் தலைமைத் தேர்தல் அதிகாரி உறுதி செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version