தமிழ்நாடு
அதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடி பணம் வாங்கிய பாமக: ஈவிகேஎஸ்.இளங்கோவன் பரபரப்பு பேட்டி!
திமுக உடன் கூட்டணி பேசுவதாக கூறி அதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடிக்கும் மேலாக பாமகவின் ராமதாஸ் பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், பாமக நிறுவனர் ராமதாஸ், அரசியல் நடத்துவது பணத்துக்காகத்தான் என்பது வெளிப்படையாக தற்போது தெரியவந்துள்ளது. தனது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வழங்க மாட்டேன் என்று சொன்ன ராமதாஸ், தன் மகனை மத்திய அமைச்சராக மகுடம் சூட்டி சந்தோஷப்பட்டார்.
பல மருத்துவ கல்லூரிகளில் செய்த ஊழல்கள் எல்லாம் தற்போது மெ வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்போது கூட, திமுகவோடு கூட்டணி பேசுகிறோம் என்று சொல்லி அதிமுகவை ஏமாற்றி ரூ.100 கோடிக்கு மேலாக பணம் வாங்கியிருப்பதாக பாமகவின் உண்மையான தொண்டர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். தைலாபுரத்தில் இதற்காக குடோன்கள் கட்டப்படுவதாக செய்திகள் வந்துள்ளது என்றார்.
மேலும், அதிமுக, பாமக, பாஜக கூட்டணி 40 தொகுதியில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாது. ஒருசில இடங்களில் அதிமுகவுக்கு டெபாசிட் கிடைப்பதற்கான வாய்ப்பு இருந்தது. ஆனால் பாமகவும், பாஜவும் வந்த பிறகு, அந்த வாய்ப்பும் பறிபோய் விட்டது என்றார் இளங்கோவன்.