தமிழ்நாடு
30 வருடங்களுக்கு முந்தைய எடப்பாடி பழனிச்சாமி சம்மந்தப்பட்ட கொலைகள்: ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிரடி!
![EPS and EVKS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/02/EPS-and-EVKS.jpg)
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அதனை தொடர்ந்த கொலைகளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ குற்றம் சாட்டினார். இந்நிலையில் கொடநாடு கொலை மட்டுமல்ல 30, 40 வருடங்களுக்கு முந்தைய அவர் சம்மந்தப்பட்ட கொலைகள் பற்றியும் இனிமேல் பேசுவேன் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் முக்கொம்பு தடுப்பணை உடைந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசையும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் ஈவிகேஎஸ்.இளங்கோவன் விமர்சனம் செய்து பேசினார். இதையடுத்து அவர் மீது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான ஈவிகேஎஸ்.இளங்கோவன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, என்மீது இந்த மான நஷ்ட வழக்கு போடுவதற்கு முதல்வருக்கு தகுதி கிடையாது. முதலமைச்சர் லஞ்சம் வாங்குவதைப் பற்றித்தான் இதுவரையில் பேசி வந்தேன். கொடநாட்டில் நடந்த 5 கொலைகளுக்கும் அவர்தான் காரணம் என்பதைப் பற்றி இனிமேல் மீண்டும் மீண்டும் பேசுவேன். கொடநாடு கொலை மட்டுமல்ல 30, 40 வருடங்களுக்கு முந்தைய அவர் சம்மந்தப்பட்ட கொலைகள் பற்றியும் இனிமேல் பேசுவேன் என்றார் அதிரடியாக.