தமிழ்நாடு
தீவிர சிகிச்சை பிரிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன்: கொரோனா தொற்று உறுதி!
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 66,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இளங்கோவன் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு சென்னை திரும்பிய நிலையில் திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனையடுத்து அவரை உடனடியாக சென்னை போரூரில் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதித்து இதயவியல் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து அவருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் வழக்கமான பரிசோதனைக்காக அவர் ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும். அதன் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என கூறப்பட்டது.
இந்நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதயத் தமனி நோய் மற்றும் லேசான கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் அவர் நன்றாக குணமடைந்து வருகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.