செய்திகள்
அதிமுகவை உடைக்க முயன்றாரா மு.க.ஸ்டாலின்?
வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற பெயரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக சார்பில் பிரச்சாரம் நடத்தி வருகிறார்.
இன்றும் நாளையும் கோவை மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். கோவை உள்ள ராஜவீதியில் தனது பரப்புரையைத் தொடங்கினார். அங்குள்ள மக்களிடையே எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
கோவை மாவட்டத்திற்காக மேம்பாலம், கிராமங்களில் ஏழைகளுக்கு என மினி கிளினிக் என பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கினோம்.
ஜெயலலிதா மறைந்தபோது தி.மு.க தலைவர் ஸ்டாலின் கட்சியையும், ஆட்சியையும் கலைக்க முயன்றார். ஆனால் நாங்கள் தொண்டர்களின் உதவியுடன் அதனை முறியடித்து ஆட்சியை தொடர்ந்து வருகிறோம். நான் முதலமைச்சராக பதவியேற்றபோது இன்னும் 1 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும். 6 மாதத்தில் ஆட்சி கலைந்து விடும் என கூறி வந்தார். ஆனால் நான் பொறுப்பேற்று 4 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டேன் என்பதை உங்களுக்கு நினைவு கூர விரும்புகிறேன்.
கொரோனா கால கட்டத்தில் ஏழை மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டனர். அவர்கள் கஷ்டத்தை போக்கவே பொங்கல் பண்டிகையின் போது ரூ.2500 வழங்கினோம். ஆனால் அதனை கூட தடுக்க தி.மு.க முயற்சித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.