கிரிக்கெட்
உலகக் கோப்பை முதல் போட்டி: இங்கிலாந்து அபார வெற்றி!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் 104 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றிபெற்றுள்ளது.
இங்கிலாந்தில் நேற்று தொடங்கிய உலகக் கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து-தென்னாப்பிரிக்கா அணிகள் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டூபிளசிஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்கத்திலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தினாலும், ஜோ ரூட், ஜேசன் ராய் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பின்னர் கேப்டன் மோர்கனும், பென் ஸ்டோக்ஸும் அதிரடியாக விளையாட இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 89 ரன் எடுத்தார். தென்னாப்பிரிக்க தரப்பில் லுங்கி ஏங்கிடி 3 விக்கெட்டுகளும், தாஹிர் மற்றும் ரபாடா தலா இரண்டு விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதனையடுத்து 312 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்துக்கொண்டிருந்தது. இதனால் அந்த அணியால் 39.5 ஓவர்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 207 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக டீகாக் 68 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து தரப்பில், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், லியாம் பிளங்கட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். ஆல்ரவுண்டராக அசத்திய பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இன்றைய ஆட்டம்: பாகிஸ்தான் Vs மேற்கிந்தியத் தீவுகள்
இடம்: டிரெண்ட் பிரிட்ஜ் மைதானம்
நேரம்: மதியம் 3 மணி.