கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான போட்டி: இந்தியா முதல் தோல்வி!

Published

on

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 38-வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழலில் இந்தியாவை சந்தித்தது இங்கிலாந்து அணி. அதன்படி டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜேசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் மிக அபாரமாக விளையாடி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்தனர். இந்த தொடக்க ஜோடியை பிரிக்க இந்திய வீரர்கள் கடுமையாக போராடினர்.

இந்திய ஸ்பின் பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்த இந்த ஜோடி 160 ரன் எடுத்திருந்தபோது பிரிந்தது. அதன் பின்னர் வந்த இங்கிலாந்து வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் அந்த அணி மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும், ஷமியின் பந்துவீச்சு அந்த ரன் வேகத்தை சற்று குறைத்தது. 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜானி பேர்ஸ்டோவ் 111 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 79 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. 9 பந்துகளை சந்தித்த கே.எல்.ராகுல் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். இதனையடுத்து வலுவான பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க களமிறங்கிய கேப்டன் கோலி, ரோஹித் ஷர்மாவுடன் இணைந்து மெதுவாக ஆட ஆரம்பித்தார். இருவரும் விக்கெட் விழாதவண்ணம் ஆடி நிறைய பந்துகளை வீணடித்தனர். இதனால் இந்தியாவின் ரன் ரேட் குறைந்தது.

இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து பிரிந்தது. பின்னர் வந்த பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்டினாலும் இந்திய அணி வெற்றி இலக்கை அடையும் வரை அவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இந்திய அணி வெற்றிபெறும் என்ற நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடினாலும் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அடிக்கடி ஸ்லோ பந்துகள் வீசி இந்திய வீரர்களை அதிரடியாக விளையாட விடாமல் பார்த்துக்கொண்டனர். குறிப்பாக தோனி மற்றும் ஹர்திக் பாண்டியாவிற்கு அதிகமாக ஸ்லோ பந்துகள் வீசி அவர்களை அதிரடியாக ஆட விடவில்லை இங்கிலாந்து வீரர்கள். இந்திய வீரர்களின் விக்கெட்டுகளையும் அவர்கள் ஸ்லோ பந்துகள் வீசியே எடுத்தனர்.

இறுதியில் இந்திய அணியால் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள்தான் எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்தியா சந்திக்கும் முதல் தோல்வி இதுவாகும். இந்திய அணி தரப்பில் ரோஹித் ஷர்மா அதிகபட்சமாக 102 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ப்ளங்கெட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சதம் அடித்து இங்கிலாந்து வெற்றிக்கு உதவிய ஜானி பேர்ஸ்டோவ் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

seithichurul

Trending

Exit mobile version