தமிழ்நாடு
அதிமுகவில் அவசர செயற்குழு கூட்டம்: புதிய அறிவிப்பு
எந்தவித தடங்கலும் இல்லாமல் நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் பெற்ற வெற்றிகளுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்றுக்கொண்டார். தற்போது அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியின் வசம் சென்றுவிட்டது. இதனையடுத்து அதிமுக செயற்குழு கூட்டத்தை கூட்ட அறிவிப்பு வெளியாகி அது ரத்தான நிலையில் தற்போது புதிய அறிப்பு வெளியாகி உள்ளது.
அதிமுக பொதுக்குழு மற்றும் அதன் தீர்மானங்கள், பன்னீர் தரப்பு நீக்கம் என அதிமுக விவகாரம் எப்போதும் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கிறது. நீதிமன்ற வழக்குகள், மேல் முறையீடு என பல பரபரப்புகளுக்கு மத்தியில் ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் பின்னர் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்படுகிறது என அதிமுக அறிவித்தது.
இந்த சூழ்நிலையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அதிமுக வெளியிட்டுள்ளது அதில், ஏப்ரல் 16-ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்குழு கூட்டத்தில் கர்நாடக பொதுத்தேர்தல், புதிய உறுப்பினர் சேர்ப்பு உள்ளிட்டவை விவாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.