தமிழ்நாடு
வீட்டுக்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்: கூரை மீதேறி உயிர்பிழைத்த குடும்பம்!
வால்பாறை அருகே நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த யானை கூட்டம் வீட்டிலுள்ள பொருள்களை துவம்சம் செய்ததால், அந்த வீட்டில் உள்ளவர்கள் நூலிழையில் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வால்பாறை அருகே முக்கோட்டுமுடி என்ற பகுதியில் இரண்டு பிரிவுகளாக 6 யானைகள் திடீரென பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் புகுந்தன. அங்கு உள்ள வீட்டுக்குள் நுழைந்த இரண்டு யானைகள் அந்த வீட்டிலுள்ள பொருட்கள் எல்லாத்தையும் தூக்கி போட்டு துவம்சம் செய்தன.
இதனையடுத்து பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் பயந்து வீட்டின் கூரையில் ஏறி உயிர் தப்பியுள்ளனர். இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர்கள் கூறியபோது ஒரு குட்டியானை ஒரு பெரிய யானை இரண்டும் வீட்டிற்குள் புகுந்த வீட்டில் உள்ள மிக்ஸி ,கிரைண்டர் உட்பட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கியது. அரிசி பருப்பு அனைத்தையும் தூக்கி எறிந்தது.
நாங்கள் உயிருக்கு பயந்து கூரை மீது ஏறி அண்டா மூடியை கரண்டியால் வைத்து சத்தம் எழுப்பினோம். சுமார் 2 மணி நேரம் கழித்து யானைகள் வெளியே சென்றனர். நாங்கள் உயிர் பிழைத்ததே பெரிய அதிசயமாக இருந்தது என்று கூறினார்கள்.
இந்த பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் வந்து குடியிருப்புவாசிகளை தொல்லை தருவதாகவும், இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சில மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.