தமிழ்நாடு
நடப்பு கல்வியாண்டில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம்: தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
நடப்பு கல்வியாண்டில் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து எவ்வளவு கட்டணம் வசூல் செய்யலாம் என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்பதும் ஆன்லைன் வழியாகத்தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகள் பள்ளி கட்டணம் பெறுவது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை தற்போது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி தனியார் பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களிடம் இருந்து 85 சதவீதம் கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்கட வேண்டும் என்றும் அந்த கட்டணத்தையும் ஆறு தவணையாக வசூலிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
இதன்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி வரை கல்வி கட்டணம் கட்டுவதற்கு பெற்றோர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதிக்குள் 85 சதவீத கட்டணங்களை பெற்றோர்கள் 6 தவணையாக செலுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களிடமிருந்து 75% கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் பள்ளி கல்வி கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காகவோ அல்லது தாமதமாக செலுத்துகிறார்கள் என்பதற்காகவோ மாணவர்களை வகுப்பில் இருந்து நீக்கக் கூடாது என்றும் பள்ளிகளில் இருந்தும் நீக்க கூடாது என்றும் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்கக்கூடாது என்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவால் கொரோனாவால் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.