தமிழ்நாடு
நாளைய தேர்வுக்கான வினாத்தாளும் கசிந்தது: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், இன்று நடைபெற்ற தேர்வின் வினாத்தாள்களும், கசிந்து உள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள தேர்வு வினாத்தாளும் கசிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளை நடைபெற உள்ள பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கான இயற்பியல் பாடத்திற்கான வினா தாள் கசிந்ததால் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாவது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஒருபுறம் விசாரணை செய்து வந்தாலும் இன்னொருபுறம் இந்த திருப்புதல் தேர்வு குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.
திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும் அதனால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் மாணவர்களை பொதுத் தேர்வு எழுதுவதற்கு தயார் படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என்றும் அடுத்த மாதமும் ஒரு திருப்புதல் தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்பட இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது. 3 மணி நேரம் மாணவர்கள் தேர்வு எழுதி பயிற்சி பெற வேண்டும் என்பதற்காகவே இந்த திருப்புதல் தேர்வு என்றும் இந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.