தமிழ்நாடு
“உயிரே போனாலும் பரவாயில்லை…”- பிரச்சாரத்தின் போது உருகிய முதல்வர் பழனிசாமி
இன்னும் ஒரு சில நாட்களில் நடக்க உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளவர் முதல்வர் பழனிசாமி. மீண்டும் எடப்பாடி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். அதிமுகவின் நட்சத்திரப் பிரச்சாரத் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருகிறார்.
இதனால் அவரது தொண்டை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் கூட்டம் முன்னர் உரையாற்றி வரும் பழனிசாமி, கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் தான் பேசுவது கேட்க வேண்டும் என்னும் காரணத்தினால் சத்தமாக பேசுகிறார். இதனால் அவர் தொண்டை பாதிக்கப்பட்டு, தன் இயல்பான குரலை இழந்துள்ளார்.
இது குறித்து சிவகங்கையில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பழனிசாமி, ‘ஜெயலலிதா இருக்கும் போது சொன்னார், ‘எனக்குப் பின்னும் அதிமுக ஆட்சி 100 ஆண்டுகள் தொடர வேண்டும்’ என்று. அதை மனதில் வைத்து தான் இன்று நான் பிரச்சாரம் செய்து வருகிறேன்.
இந்தப் பயணத்தின் போது என் தொண்டை அல்ல உயிரே போனாலும் பரவாயில்லை. திமுகவை வீழ்த்துவது மட்டுமே என் இறுதி லட்சியம்’ என்று உருக்கமாக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.