தமிழ்நாடு
கிடுகிடுவென உயரும் கொரோனா: நாளை முதல்வர் அவசர ஆலோசனை!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை மூத்த அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், மாநிலத்தில் விரைந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை செய்ய உள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா இரண்டாவது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காரணத்தினால் ஒரு நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை இருக்கிறது. குறிப்பாக சென்னையில் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இதையொட்டித் தான் புதிய கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை தமிழக அரசு அமல் செய்துள்ளது. அதேபோல பொது இடங்களில் முகக் கவசம் போடாதவர்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது அரசுத் தரப்பு. இப்படியான சூழலில் தான் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மாநில அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
தற்போது தமிழகத்தில் தேர்தல் காலம் என்பதால், முதல்வரால் எந்தவொரு முடிவையும் நேரடியாக அமல் செய்ய முடியாது. மாறாக ஆலோசனையின் போது அதிகாரிகளுக்கு முதல்வர் சில யோசனைகளை வழங்கலாம். அதன் பேரில் அதிகாரிகள் விதிமுறைகளை அமல் செய்யலாம்.