தமிழ்நாடு
‘தமிழகத்தில் சிறுபான்மையினர் அச்சப்பட தேவையில்லை!’- முதல்வரின் பேச்சும் எழுந்த விமர்சனமும்
தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மையினர், எந்த விஷயம் குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவையில், ‘தமிழக கிறிஸ்துவ ஜனநாயக கூட்டமைப்பு மாநில மாநாடு’ நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய பழனிசாமி,
‘அவர் அவர்களுக்கு, அவர்களின் மதம் புனிதமானது. ஒருவரின் மதத்தை இன்னொருவர் அவதூறாக பேசுவதோ, சர்ச்சையாக பேசுவதோ சரி கிடையாது. அப்படியான விஷயத்தை எப்போதும் அதிமுக அரசு ஆதரிக்காது. தமிழகத்தில் சிறுபான்மையினர் தங்களின் உரிமைகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். எந்தவொரு விஷயம் குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
சட்ட ஒழுங்கைப் பொறுத்தவரை தொடர்ந்து 3 ஆண்டுகளாக, சிறந்த மாநிலம் என்கிற விருதைப் பெற்று வருவது தமிழகம் தான். அப்படியான தமிழகத்தில் அனைவரும் நிம்மதியாக வாழ முடியும்’ என்றார்.
அதிமுக, எப்போதும் மதச்சார்பற்ற கட்சியாகவும், சிறுபான்மையினர்களின் வாக்கு வங்கியைக் கணிசமாக பெற்றக் கட்சியாகவும் இருந்து வந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி வைத்தது.
பாஜக எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்கிற பொது பிம்பம் உள்ளது. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்த காரணத்தினாலேயே அதிமுக இப்படியான கருத்துகளைப் பேச வேண்டியுள்ளது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் எழுந்துள்ளது.