தமிழ்நாடு
‘சசிகலா 1000 பேர்ட்ட பேசினாலும் கவலை இல்லை..!’- சீறும் எடப்பாடியார்
![Edappadi Palanisamy - Sasikala - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/02/Edappadi-Palanisamy-Sasikala.jpg)
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், தினம் தினம் தன் ஆதரவாளர்களுடன் பேசி வருகிறார். இதனால் அதிமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது.
குறிப்பாக சசிகலா சில நாட்களுக்கு முன்னர் அதிமுகவின் நிர்வாகி ஒருவரிடத்தில் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியை முதல்வராக தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து விளக்கினார். அவர், ‘எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்தே கொங்கு மண்டல மக்கள் அதிமுகவுக்குத் தான் ஓட்டுப் போட்டு வருகிறார்கள்.
அவர்கள் விசுவாசத்துடன் நமக்கு இருந்தார்கள். அந்த காரணத்தினால் தான் கொங்கு மண்டலத்தில் இருந்து ஒருவரையே முதல்வர் பொறுப்புக்கு கொண்டு வந்தேன். ஆனால், அப்படி வந்தவர் இன்றைக்கு என்னென்ன செய்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும்’ என்று பேசுகிறார்.
இந்த ஆடியோ பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ‘அந்த அம்மா இப்ப எங்க கட்சியிலேயே இல்லை. அதிமுக என்பது ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கிற கட்சி. எனவே அந்த அம்மா 10 பேர் கிட்ட இல்ல, ஆயிரம் பேர் கிட்ட பேசினாலும் எங்களுக்குக் கவலை இல்லை’ என்று கூறியுள்ளார்.