தமிழ்நாடு
ஸ்டாலினுக்கு முதல்வர் பதவியின் மீது அவ்வளவு வெறி: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
வேலூர் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ந்தது போல தமிழகத்திலும் ஆட்சி கவிழும் என பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை சின்னத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவாக நேற்று கே.வி.குப்பம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் ஆட்சி கவிழும் என ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி கொடுத்து பேசினார். கடந்த 2017-ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது திமுகவினர் என்ன அராஜகம் செய்தார்கள் என்பதை ஊடகத்தின் வாயிலாகப் பார்த்திருப்பீர்கள்.
அவர்கள்தான் தாங்கள் நினைத்திருந்தால் ஆட்சியைக் கவிழ்த்திருப்போம் என்று கூறுகிறார்கள். ஒரு காலத்திலும் அதிமுக அரசை வீழ்த்த முடியாது. ஆட்சியையும் கவிழ்க்க முடியாது. கட்சியையும் உடைக்க முடியாது. சட்டமன்றத்திலிருந்து ஸ்டாலின் வெளியே வரும்போது சட்டையைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்தார். முதல்வர் பதவியின் மீது அவ்வளவு வெறி அவருக்கு. மக்கள் கொடுத்தால் எடுத்துக்கொள்ளுங்கள். நாங்களா வேண்டாம் என்கிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரு விவசாயி முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளேன். பதவி வெறிபிடித்து நாங்கள் திரியவில்லை என ஸ்டாலினை விமர்சித்தார்.