தமிழ்நாடு

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும்: வைகோ

Published

on

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தற்போதுவரை நடந்து வருகிறது. பாஜக மத்தியிலும், திமுக மாநிலத்திலும் முன்னிலையில் உள்ளது. அதிமுக தேனி தொகுதியை தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் பின்னடைவில் உள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்றத் தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியை அளித்ததன் மூலம், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கை வழியில் நிற்கின்ற திராவிட இயக்க பூமி தமிழ்நாடு என்பதை, இந்திய அரசியல் அரங்கத்திற்குத் தமிழக மக்கள் பறைசாற்றி இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் மதவாத சக்திகளுக்கு இடம் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுக்கால பாஜக அரசு, தமிழகத்தின் உயிராதாரமான காவிரி நீர் பிரச்சினை முதல் அனைத்திலும் தமிழ்நாட்டை வஞ்சித்து வந்ததையும், அதிமுக அரசு, அவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்ததையும் பொறுத்துக் கொள்ள முடியாமல், தமிழக மக்கள் கோபாவேச உணர்வுடன் பொங்கி எழுந்துள்ளனர். பல்லாயிரம் கோடி பணத்தைச் செலவழித்தபோதிலும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாகத் தமிழகம் முழுமையும் படுதோல்வி அடைந்துள்ள அதிமுக அரசு, மக்கள் நம்பிக்கையை அடியோடு இழந்து விட்டது.

தமிழ்நாடு சட்டசபைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில், அதிகாரத்தின் துணைகொண்டு நடத்திய அத்துமீறல்களால் சில தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தாலும், அதிமுக அரசுக்கு, அதிகாரப் பொறுப்பில் நீடிக்க எந்த உரிமையும் இல்லை. எனவே, எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு உடனே பதவி விலக வேண்டும்.

வடபுலத்தில், மதவாத சனாதன சக்திகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கண்டதாலும், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து எதிர்க்கட்சிகளின் தரப்பில் ஓரணியில் நின்று தேர்தலைச் சந்திக்கும் சூழல் உருவாகாமல் போனதாலும், வாக்குகள் சிதறி பாஜக கூட்டணிக்குச் சாதகமான முடிவுகள் வந்துள்ளன.

தமிழகத்தில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியைக் கட்டி அமைத்து, தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை ஈட்டிய தி.மு.க தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமைக்கு தமிழக மக்கள் அங்கீகாரம் வழங்கி இருக்கின்றார்கள். தமிழகச் சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும், திமுக கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையைத் தந்திருக்கின்றார்கள் என வைகோ தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version