தமிழ்நாடு
“ஸ்டாலினுக்கு நோபல் பரிசு..!”- சிபாரிசு செய்யும் எடப்பாடியார்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ளதால், தமிழக முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தொடர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அந்த வகையில், காஞ்சிபுரம் சென்ற எடப்பாடி பழனிசாமி, வேனில் நின்றபடி, ஶ்ரீபெரும்பதூரில் மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, ‘அம்மாவின் அரசு அனைத்துத் துறைகளிலும் மிக நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அரசைக் குறை கூற வேண்டும் என்ற காரணத்திற்காகவே, வேண்டுமென்றே ஏதேதோ சொல்லி வருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
அவரும் பல ஆண்டுகளாக, இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று தொடர்ச்சியாக கனவு கண்டு வருகிறார். அவர் காணும் கனவு ஒரு நாளும் நிறைவேறாது. சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகும் அம்மாவின் ஆட்சி தான் தமிழகத்தில் தொடரும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
இந்த ஆட்சியை குறை சொல்வதற்காக தினமும் பொய்யாக சொல்லி வருகிறார் ஸ்டாலின். யாருக்காவது பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால், அதை ஸ்டாலினுக்கு தான் முதலில் கொடுக்க வேண்டும்’ என்று அதிமுக தொண்டர்களின் ஆரவாரத்துக்கு இடையில் உரையாற்றினார் எடப்பாடியார்.