தமிழ்நாடு
ஸ்டாலின் புள்ளி வைத்தால் எடப்பாடி கோலம் போட்டு விடுகிறார்: சுதாரிக்குமா திமுக?
ஆட்சிக்கு வந்தபின் என்னென்ன செய்வோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுவதை ஆட்சியில் இருக்கும்போதே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு ஊழியர்களின் போராட்டங்களின் போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ஆட்சிக்கு வந்தவுடன் வாபஸ் பெறுவோம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் சமீபத்தில் வாக்குறுதி தெரிவித்தார். ஆனால் அதிரடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு ஊழியர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் செய்தார்.
அதேபோல் விவசாய கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்வோம் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இது நிச்சயம் நடக்கும் என்றும் முக ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து வந்தார். இந்த நிலையில் இன்று திடீரென அதிரடி அறிவிப்பாக அனைத்து விவசாய கடன்களும் ரத்து என அறிவிப்பு வந்துள்ளது.
இதேபோல் ஒவ்வொரு வாக்குறுதியும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே அந்த வாக்குறுதியை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றிக் கொண்டே வருவதால் முக ஸ்டாலின் கோலம் போட புள்ளி வைத்துக் கொண்டிருக்கும் போதே எடப்பாடியார் கோலத்தை போட்டு முடித்துவிடுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமி, கொடுத்த வாக்குறுதியை மட்டுமின்றி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் என பிரச்சாரம் செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது. எனவே இனிமேல் மக்களிடம் வாக்குறுதி எல்லாம் கேட்டு ஓட்டு கேட்க முடியாது என்றும், அதிமுகவால் நிறைவேற்றாத திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று யோசித்து திமுகவில் இருக்க வேண்டுமென்று அரசியல் பிரமுகர்கள் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்