தமிழ்நாடு
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது செருப்பு வீச்சு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தஞ்சாவூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவரது வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் செருப்பு வீசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. என்.ஆர்.நடராஜன் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக அங்கு போட்டியிடுகிறார். இதனையடுத்து கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி நேற்று 9 மணியளவில் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது திடீரென செருப்பு ஒன்று முதல்வர் வாகனத்தின் மீது வீசப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குறிவைத்தே இந்த செருப்பு வீசப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் செருப்பு முதல்வர் மீது படாமல், அவருக்குப் பின்புறத்தில் விழுந்தது. பின்னால் இருந்து செருப்பு வீசப்பட்டதால் யார் வீசினார்கள் என்பது தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.