தமிழ்நாடு
மீண்டும் கூடும் சட்டமன்றம்: எடப்பாடி பழனிசாமி திடீர் ஆலோசனை!
மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் சட்டமன்றம் கூட இருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும், தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது என்பதும் அதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது விளக்க உரையை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் சட்டமன்றத்தில் கொடநாடு கொலை வழக்கு குறித்த விவாதம் நடைபெற்றது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர் என்பதும் அதிமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மூன்று நாட்களுக்குப் பின்னர் இன்று மீண்டும் சட்டசபை கூட உள்ளது. இன்னும் ஒரு சில நிமிடங்களில் சட்டசபை கூட உள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். சட்டசபை நடைபெறும் கலைவாணர் அரங்கில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
கொடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில் அதிமுக ஆலோசனை செய்து வருகிறது என்பதும், சட்டசபையில் எழுப்ப வேண்டிய தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் கொடநாடு விவகாரம் சட்டசபையில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதம் செய்ய வேண்டிய நிலையில், கொடநாடு விவகாரம் அவசியம் விவாதிக்க வேண்டிய ஒன்றா? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எதிர்க்கட்சி தலைவருக்கு மன ரீதியிலான துன்பத்தை அளிக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்.