தமிழ்நாடு
“முடிஞ்சா அதிமுகவை உடைச்சுப் பாரு!”- மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி நேரடி சவால்
சட்டப்பேரவைத் தேர்தல் நெருக்கி வருவதால், தமிழகத்தின் இரண்டு பிரதானக் கட்சிகளான திமுக – அதிமுக இடையே கடும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன. இதன் உச்சமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சீண்டும் வகையில் பேசியுள்ளார்.
‘வெற்றிநடை போடும் தமிழகம்’ என்னும் தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, தொடர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி. இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, ‘இன்றைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக உடையும் என்று பேசி வருகிறார். எந்தக் காலத்திலும் உடையாது. இங்கிருக்கும் மக்களின் இயக்கம் அண்ணா திமுக. அதை யாராலும் உடைக்க முடியாது. மக்கள் ஆளுகின்ற கட்சி அதிமுக. மக்கள்தான் இன்று ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். நான் வெறும் முதல்வர் பதவியில் மட்டும்தான் உள்ளேன். இங்கிருக்கும் மக்கள்தான் நாட்டின் முதலமைச்சர்கள். திமுகவைப் பற்றி இப்படி ஸ்டாலினால் பேச முடியாது. ஆனால் அதிமுக, மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற கட்சியாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது’ என்று பேசினார்.