தமிழ்நாடு
“இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை ஓ.பி.எஸ்..!”- போடியில் எடப்பாடி பழனிசாமி நெகிழ்ச்சிப் பரப்புரை
தமிழக முதல்வரும் அதிமுகவின் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்துப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேனி மாவட்டம் போடியில் பன்னீர்செல்வம், இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் அங்கு தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு போடியில் ஓ.பி.எஸ்.ஸுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், ‘இறைவனால், போடி தொகுதிக்கு கொடுக்கப்பட்ட கொடை அண்ணன் ஓ.பன்னீர்செல்வம். இவரை எதிர்த்து இந்த தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் நிற்கிறார். அவர் முதலில் அதிமுகவில் இருந்தவர். அதிமுக சார்பில் எம்.எல்.ஏ-வாக தேர்வு செய்யப்பட்டவர். ஆனால், இன்று திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக தொண்டனின் உழைப்பால் பதவி சுகத்தை அனுபவித்தவர் இன்று எதிரிக் கட்சியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
போடிநாயக்கனூர் தொகுதியில் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் மாண்புமிகு முதல்வர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுடன்… #TamilNaduElections2021 #AIADMKFOR2021 pic.twitter.com/5EXLGWW1PQ
— O Panneerselvam (@OfficeOfOPS) March 27, 2021
அவரை இந்த தேர்தலில் நீங்கள் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். அண்ணன் பன்னீர்செல்வத்தை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நல்லது செய்வேன் என்று சொல்லி வாக்கு கேட்கத் தெரியாது. மற்றவர்களை வசைபாடி எப்படி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கணக்குப் போடுபவர் அவர். என்னைத் திட்டுவார். பின்னர் அண்ணன் ஓ.பி.எஸ்.ஸைத் திட்டுவார். பின்னர் அதிமுகவை திட்டுவார். பிரச்சாரத்தை முடித்துக் கொள்வார்’ என்று பேசியுள்ளார்.