தமிழ்நாடு
’சொந்த அண்ணனுக்கே உதவாத ஸ்டாலின் மக்களுக்கு உதவுவாரா?’- முதல்வர் கேள்வி
’சொந்த அண்ணனுக்கே உதவாத ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு எப்படி உதவுவார்?’ என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பல அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போது பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வின் முதல்வர் வேட்பாளர் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பிரசார சுற்றுப்பயணத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.
கோவை சத்தியமங்கலம் பகுதியில் இன்று முதல்வர் தனது பிரசாரத்தை மக்கள் மத்தியில் நடத்தினார். முதல்வர் பழனிசாமி கூறுகையில், “ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் தான் ஸ்டாலினும் அழகிரியும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கு கட்சியில் இடம் தர மறுக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் நாட்டு மக்களுக்கு என்ன செய்து விடுவார் ஸ்டாலின்? திமுக என்பது ஒரு கார்ப்ரேட் நிறுவனம். அந்த கார்ப்ரேட் நிறுவனத்தின் சேர்மன் ஆக இன்று ஸ்டாலின் இருக்கிறார். நாளை அந்தப் பதவிக்கு அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் வருவார்.
மேற்படி, திமுக-வில் உள்ளவர்கள் அனைவரும் ரெளடிகள். ஆனால், அதிமுக-வில் உள்ள அனைவரும் விவசாயிகள். முன்னர் கோவையில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்திய போது அவர்களை சுட்டுக் கொன்றவர்கள் திமுக-வினர். விவசாயியைக் கொலை செய்பவர்கள். ஏழை மக்களுக்கும் விவசாய மக்களுக்கும் உதவும் கட்சி அதிமுக. நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலம் ஆக பல நிலைகளில் இருப்பதற்குக் காரணம் அதிமுக தான். அனைத்து துறைகளிலும் விருதுபெற்ற ஒரே மாநிலம் ஆக தமிழகம் உள்ளது. கிராமங்களில் ஏழை மக்களுக்கு குடிநீர் இணைப்பு, மலைப்பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை, பொங்கல் பரிசாக ஆக அரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்ட பொருட்களை வழங்குகிறோம்.
ஆனால், ஸ்டாலின் அதிமுக-வில் வெறும் ஊழல் மட்டும் இருப்பதாக எப்போதும் குற்றம் சுமத்தி வருகிறார். இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. நான் சவால் விடுகிறேன். அதிமுக அரசில் எந்தெந்த துறையில் என்னென்ன ஊழல் நடந்து உள்ளது? நான் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? நான் முதல்வர் பதவியை ஏற்று 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்குள் எத்தனை முறை ஆட்சியைக் கலைக்க நினைத்தார்? எத்தனை முறை கட்சியை உடைக்க நினைத்தா? ஆனால், ஸ்டாலினின் அத்தனை முயற்சிகளையும் மக்களாகிய உங்கள் துணையோடு தகர்த்தி நாட்டிலேயே சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம்” எனப் பேசினார்.