தமிழ்நாடு
மு.க.ஸ்டாலின் கையில் வேல்: கொதி கொதித்த எடப்பாடி பழனிசாமி!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று திமுக சார்பில் திருத்தணியில் ஒருங்கிணைக்கப்பட்ட கூட்டத்தில் பங்கேற்றார். அங்கு அவருக்கு திமுகவினர், கடவுள் முருகனின் குறியீடாக இருக்கும் வேல் ஒன்றை கொடுத்தனர். திருத்தணியில் முருகன் கோயில் மிகவும் பிரபலம் என்பதால் இப்படியான விஷயத்தை திமுகவினர் செய்தனர். இதைச் சுட்டிக்காட்டி ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் இன்று வேல் வந்துள்ளது. கடவுளை இழிவாக பேசியவர்கள் கையில் இன்று வேல் வந்துள்ளது. இப்படியான காட்சியைப் பார்க்கிறோம். முருகனின் வேலை மட்டும் கையில் எடுத்தால் அருள் கிடைத்துவிடாது. அதிமுகவுக்குத்தான் முருகனின் வரம் கிடைக்கும்.
அதிமுகவில் இருப்பவர்கள் கடவுளை உண்மையாக வழிபடுபவர்கள். நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று உண்மையாக பிரார்த்திக்கிறோம். எனவே கடவுள் எங்கள் பக்கம் தான் இருப்பார். முருக பக்தர்கள், நீண்ட நாட்களாக தைப்பூச நாளில் பொது விடுமுறை வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தார்கள். முருகனை வணங்குவதற்கு ஏதுவாக அவர்கள் அப்படியான கோரிக்கையை வைத்து வந்தார்கள். அந்த கோரிக்கையை நிறைவேற்றியது அண்ணா திமுக அரசுதான்.
தேர்தல் வந்துவிட்டதால் தற்போது முருகனின் வேலை கையிலெடுத்துள்ளார் ஸ்டாலின். ஆனால், அவருக்கு முருகன் உரிய நேரத்தில் தண்டனை வழங்குவார். முருகனை மட்டுமல்ல அனைத்து மதக் கடவுகளையும் மதித்து நடப்பது அதிமுக அரசுதான். அவரவருக்கு அவரவர் தெய்வம் புனிதமானது. அதற்குரிய மரியாதையை அதிமுக அரசுதான் கொடுக்கும். நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம். சமமாக நடத்துகிறோம். ஆனால், திமுக அப்படியா இருக்கிறது. பகல் வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை வேல் என்பது ஸ்டாலினின் கண்ணுக்கே தெரியவில்லை. தேர்தல் நெருங்கியவுடன் அது அவரது கண்களுக்குத் தெரிந்துவிட்டது’ என்று கோவையில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பேசினார் எடப்பாடியார்.